April 3, 2019 தண்டோரா குழு
கோவை மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியில் தோட்டத்தில் வைத்திருந்த மின் வேலியில் சிக்கி 12 வயது மதிக்கத் தக்க ஆண் யானை உயிரிழந்தது.
கோவை மாவட்டம் மேட்டுபாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதி அருகே பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்புப்பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள தனியார் வாழைத்தோட்டத்தில் ஆண்காட்டுயானை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு இன்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன், வனவர் ராதாகிருஷ்ணன், வனக்காப்பாளர் சதீஷ்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர்.
விவசாயி தனது தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளார். தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து விடாமல் இருக்க தோட்டத்தைச்சுற்றிலும் சூரிய மின்வேலி அமைக்காமல் விதிகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக 12 வோல்ட் திறன் கொண்ட பேட்டரி மூலம் இயங்கும் மின்வேலி அமைத்துள்ளார். இதனிடையே நேற்று இரவு உணவைத்தேடி வந்த காட்டு யானை வாழைத்தோட்டத்திற்குள் வரும்போது மின்வேலியில் சிக்கி இறந்ததா? என்று வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் தீவிர விசாரணைக்கு பின்னரே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும்.
இறந்து கிடந்த ஆண் காட்டு யானைக்கு வயது சுமார் 10 ல்இருந்து 12 க்குள் இருக்கும். தமிழ்நாடு மின்சார வாரியத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இது குறித்து அரசு வன கால்நடை மருத்துவ அலுவலர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் முன்னிலையில் நடைபெறும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும்.