March 28, 2019 தண்டோரா குழு
கோவை துடியலூரில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் குறித்து துப்புக் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த 26ம் தேதி வீட்டிற்கு அருகே, உடலில் காயங்களுடன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அதே பகுதியை சேர்ந்த 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிறுமி கொலை வழக்கு குற்றவாளிகள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என உறுதியளித்துள்ள போலீசார், அதற்கான தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளனர்.