March 31, 2019
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சந்தோஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த 26ம் தேதி வீட்டிற்கு அருகே, உடலில் காயங்களுடன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கோவை எஸ்.பி உத்தரவின்பேரில், 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், இந்த வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என காவல்துறை சார்பில் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை கையாளும் தனிப்படை போலீசார், கடந்த 6 நாட்களில், பலரிடம் விசாரணை கொண்டனர். எனினும் எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர்.
இந்நிலையில், சிறுமி கொலை வழக்கில் தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்த அன்று, சிறுமியின் வீட்டின் அருகே துக்க நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்தவன் என்பதும், சிறுமியின் சடலத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த டீ சர்ட், அவனுடையது தான் என்றும், தனிப்படை போலீசாரின் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, மேலும், 10 பேரை ரகசிய இடத்தில் வைத்து, தனிப்படை போலீசார் விசாரித்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமி கொலை தொடர்பாக பிடிபட்டுள்ள சந்தோஷ்குமார் பாட்டி அதே நாளில் மர்மமாக உயிரிழந்துள்ளார். தனது பாட்டியை சந்தோஷ்குமார் கொலை செய்தாரா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை பிரிநிதிருக்கும் சந்தோஷ்குமார் தனது பாட்டி வீட்டுக்கு வந்தபோது கொடூரத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.