March 18, 2019 தண்டோரா குழு
கோவை சரளாவை வைத்து எங்களை நேர்காணல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை மக்கள் நீதி மையத்தில் இருந்து கடலூர், நாகை மண்டல பொறுப்பாளர் சி.கே.குமரவேல் விலகியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் கடலூர், நாகை மண்டல பொறுப்பாளருமாக கடலூரைச் சேர்ந்த சி.கே.குமரவேல் நியமிக்கப்பட்டார். கட்சி ஆரம்பிக்கப்பட்டு முதல் முறையாக அக்கட்சி தற்போது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதியில் தனித்து போட்டியிடவுள்ளது. அதைபோல் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடவுள்ளது. வேட்பாளர்களை நிறுத்தும் நேர்காணலும் பரிசீலனையும் நடைபெற்று வருகிறது. வரும் 24-ம் தேதி கோவை கொடிசியா திடலில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாராளுமன்ற தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக சி.கே.குமரவேல் நிறுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு அவர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார். இதையடுத்து, அவரது ராஜினாமா தொடர்பாக அந்த கட்சியின் சார்பில் இன்று விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.அதில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும்போதே தன்னை கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக சி.கே.குமரவேல் சமூக வலைத்தளங்களில் முன்னிறுத்திக் கொண்டார். இதுதொடர்பாக அவர் கட்சி தலைமையிடம் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லாததால் குமரவேலின் ராஜினாமா ஏற்கப்பட்டது என அக்கட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சி.கே.குமரவேல்,
நேர்காணலில் நான் கலந்து கொண்டேன், நான் கலந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு தவறு. யாரும் போட்டியிட முன்வராததால் கடலூரில் போட்டியிட முன்வந்தேன். கடலூரில் பணியை தொடங்கும்படி மையக்குழுவில் இருந்தவர் சொன்னதால்தான் தொடங்கினேன். கமல்ஹாசனை சூழ்ந்துள்ளவர்கள் அவருக்கு தவறான வழிகாட்டுதலை வழங்குகின்றனர்; அதை ஏற்றுக்கொண்டு கமல் செயல்படுகிறார்.
கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்திக்க முடியவில்லை. புதியவர்களால் கட்சி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கோவை சரளா நேர்காணல் நடத்துவதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. எவ்வளவு பணம் செலவு செய்வீர்கள் என்பது தான் அவரது பிரதான கேள்வியாக உள்ளது என குற்றம்சாற்றியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சி.கே.குமரவேல் விலகியதை தொடர்ந்து, கடலூர் வடக்கு மண்டல பொறுப்பாளர் வெங்கடேஷ், கடலூர் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் நவீன் கார்த்திக் ஆகிய 2பேர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.