July 10, 2018
தண்டோரா குழு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடரும் கனமழையின் காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால்,மறு அறிவிப்பு வரும் வரை குற்றாலம் அருவிக்கு செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதனால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.கடந்த சில நாட்களாக அவ்வப்பொழுது சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதன் காரணமாக,மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் அருவிக்கு,சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டவுள்ளது.அணையின் மொத்த கொள்ளளவான 50 அடிக்கு,தற்போது 47.5 அடியாக உயர்ந்துள்ளது நிலையில்,அணை நிரம்பி வழிய இன்னமும் 2.5 அடி உயரமே உள்ளது.