April 13, 2018
தண்டோரா குழு
கோவையில் உள்ள காருண்யா பல்கலைக் கழகத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், முறையாக கல்வி உதவித் தொகை வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் கூறி மாணவர்கள் இன்று(ஏப் 13)உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
கோவையை அடுத்த காருண்யா நகர் பகுதியில் காருண்யா பல்கலைக் கழகம் அமைந்து உள்ளது.இந்த பல்கலைக் கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த பல்கலைக் கழகத்தில் படித்து வரும் மாணவர்கள் பெரும்பாலும் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும்,இது குறித்து புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் இன்று பல்கலை கழக மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும்,கல்லூரியல் கல்வி உதவித் தொகை முறையாக தருவதில்லை எனவும்,சரிவர அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை எனவும்,தங்களது புகார்கள் சரிசெய்யும் வரை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேரூர் பகுதி டி.எஸ்.பி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது மாணவர்கள் சிலர் கற்களை கொண்டு தாக்கியதால் காவல் துறையினர் மாணவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
மேலும்,பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு பல்கலை கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.காவல்துறை தடியடி நடத்தியதில் விடுதிக்குள் ஓடிய மாணவர்கள் விடுதி பொருட்களை உடைத்து சூரையாடினர்.