June 11, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் ஜூன் 21ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா பரவல் அதிகம் உள்ள கோவை உட்பட 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டுமே அனுமதிக்கப்படுள்ளது.
கோவை உட்பட 11 மாவட்டங்களில் கூடுதலாக கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு வரும் 14ஆம் தேதி முதல் அனுமதி :-
தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ பதிவுடன் அனுமதி.
மின் பணியாளர், பிளம்பர், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் வீடுகளுக்கு சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.ஆனால் இவ்வகை கடைகள் திறக்க அனுமதி இல்லை
மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி. ஆனால் விற்பனை கடைகளுக்கு அனுமதி இல்லை.
வாடகை வாகனங்கள் டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதி.மேலும் வாடகை டாக்ஸிகளில் ஓட்டுனர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி.
வேளாண் உபகரணங்கள் , பம்ப்செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்பட அனுமதி. விற்பனை கடைகள் அல்ல.
கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி.
மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி.
ஏற்றுமதி நிறுவனங்கள் அதற்கான இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25% பணியாளர்களுடன் வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி.