September 20, 2019 தண்டோரா குழு
கோவை இருகூர் அருகே அங்கன்வாடி மையத்திற்குள் 6 அடி நீளச் சாரை பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பை பிடிக்க முயன்ற இளைஞர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் இருகூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை திடீரென அங்கன்வாடி மையத்திற்கு 6 அடி கருப்பு சாரை பாம்பு புகுந்துள்ளது. அப்போது அங்கன்வாடி மையத்தில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த மோகன்குமார் என்பவர் அங்கன்வாடி மையத்தின் சத்துணவு கூடத்தில் இருந்த பாம்பை பிடிக்க முயன்றார், அப்போது பாம்பு கடித்ததால் உடனடியாக மோகன்குமார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின் அங்கிருந்த பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டது.பிடிபட்ட பாம்புடன் சிகிச்சைக்காக மோகன்குமார் அழைத்துவரப்பட்டதால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.