November 7, 2019 தண்டோரா குழு
கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதோடு,அவரது தம்பியும் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
2010 ஆம் ஆண்டு பள்ளி சென்ற சிறுமி, பணத்துக்காக கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது தம்பியும் கடத்திக் கொல்லப்பட்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், போலீசாரிடம் இருந்து தப்பியோடியபோது, மோகன்ராஜ் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மனோகரன் என்பவருக்கு கோவை நீதிமன்றம், தூக்குத்தண்டனை விதித்தது. சென்னை உயர்நீதிமன்றமும் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த தண்டனையை உறுதி செய்தது
அதைப்போல் மனோகரனுக்கு மரண தண்டனையை உறுதி செய்து கடந்த ஆகஸ்டு 1 -ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்புக்கு எதிராக சீராய் ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதன் மீதான தீர்ப்பை கடந்த அக்டோபர் 16 -ம் தேதி ஒத்திவைத்த நீதிபதிகள் இன்று வரை தூக்கு தண்டணையை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பாலினாரிமன் தலைமையிலான அமர்வு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.மூன்று நீதிபதிகள் இன்று வழக்கை விசாரித்த நிலையில், இரண்டு நீதிபதிகள் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்யலாம் என்று கூற, ஒரு நீதிபதி தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக்கலாம் என்று தெரிவித்தார். எனினும், பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தின் அடிப்படையில் மனோகரனின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.