July 16, 2020 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளுக்கான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு அரசு ஊழியர்கள் பலர் பணியாற்றி வரும் நிலையில், அண்மையில் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து,
அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும், மற்ற ஊழியர்கள் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, நேற்று 63 நபர்களுக்கு வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஊரக உள்ளாட்சி துறை பிரிவில் பணியாற்றும் கணினி உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.