March 14, 2018
தண்டோரா குழு
கோவை ஆலாந்துறை அடுத்த கரடிமடை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளது.இந்த யானைகள் உணவு தேடி ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.மேலும் தற்போது வனப்பகுதிக்குள் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் தண்ணீர், மற்றும் உணவு தேடி ஊருக்குள் நாள்தோறும் வர துவங்கியுள்ளது.
இந்நிலையில் பேருர் அடுத்த மத்திபாளையத்தில் சந்திரன் என்பவர் தோட்டத்தில் அரசாணிக்காய் பயிரிட்டுள்ளார்.அதனை சாப்பிட சுமார் 12 வயது மதிக்க தக்க ஆண்யானை செவ்வாய்க்கிழமை இரவு வந்துள்ளது.இதனை தொடர்ந்து அந்த யானை தோட்டத்தில் மயங்கி விழுந்து இறந்துள்ளது.புதன்கிழமை காலை தோட்டத்திற்கு சென்ற சந்திரன் யானை இறந்து கிடப்பதை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அங்கு வந்த மதுக்கரை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் யானை இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் வனத்துறை மருத்துவரை கொண்டு யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.யானை இறந்த இடம் அருகே மின்சார வேலி உள்ளதால் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததா என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.