September 25, 2019 தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவர் மருத்துவமனையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சாய்பாபா காலனி, அழகேசன் ரோடு பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி (வயது 49), அவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த நான்கு வருடங்களாக இயன்முறை மருத்துவர் ஆக பணியாற்றி வருகிறார். அவர் இன்று வழக்கம்போல மருத்துவமனைக்கு பணிக்கு வந்தார். அப்பொழுது மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென மயங்கி தரையில் விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு தூக்கிக் கொண்டு வந்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். பழனிசாமிக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
திடீர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்தனர். மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அங்கு உள்ள டாக்டர்கள் இடையே சோகத்தை உருவாக்கியுள்ளது.