April 3, 2019
கோவை அன்னூரில் திமுக தலைவர் ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளரான அ.ராசாவிற்கு ஆதரவு கேட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்றிருந்தார்.
பின்னர் பொதுக்கூட்டத்தை முடித்து கார் மூலம் அன்னூர், அவிநாசி வழியாக திருப்பூர் சென்றார். அப்போது அன்னூர் பேருந்து நிலையம் அருகே அவரது வாகனம் சென்றபோது திடீரென தனது வாகனத்தை நிறுத்துமாறு கூறிய ஸ்டாலின் காரிலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத வேட்பாளர் அ.ராசா உள்ளிட்ட திமுகவினர் ஸ்டாலினுடன் நடைபயணம் மேற்கொண்டனர். அங்கிருந்து அவினாசி சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்ற மு.க ஸ்டாலின் அவ்வழியே வந்த பேருந்து பயணிகளிடமும் பொதுமக்களிடமும் கைகுலுக்கி திமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனைக் கண்ட பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் உற்சாகத்துடன் தாங்களாகவே முன்வந்து ஸ்டாலினுக்கு கை கொடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.