June 9, 2020
தண்டோரா குழு
கோவையில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவு தேர்வு நடத்திய சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.
கோவை சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு இரு தினங்களாக நடத்தப்பட்டுள்ளது. தினமும் 10 முதல் 15 மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பள்ளியில் நுழைவு தேர்வு நடப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு பிரேம் என்பவர் புகைபடம் மற்றும், வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதனையடுத்து உடனடியாக பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத வந்த சிறுவர்களையும் அவர்களின் பெற்றோரையும் பள்ளியில் இருந்து வெளியே அனுப்பியது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா மற்றும் தெற்கு வட்டாட்சியர் அருள்முருகன் ஆகியோர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.பள்ளி முதல்வர் மெர்சி மெட்டில்டா அறையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் பள்ளி வளாகத்தை முழுமையாக ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பள்ளி முதல்வர் அறை, நுழைவுத்தேர்வு நடத்திய பகுதி என அனைத்தையும் மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். நுழைவுத் தேர்வு நடத்தியது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்தார்.
பள்ளி நிர்வாகத்தை பொறுத்தவரை பத்தாம் வகுப்பு தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்கவே பள்ளி வளாகம் திறக்கப்பட்டு இருந்ததாகவும் , பள்ளி திறக்கப்பட்டு இருப்பதை அறிந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் பள்ளியில் சேர்க்கை நடைபெறுகின்றதா என பார்க்க வந்ததாகவும், நுழைவுத்தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தனர். இந்த நுழைவுத் தேர்வு விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.