June 3, 2020
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் சொப்பன சுஜா. இந்த காவல் நிலையத்தில் நீதிமன்றம் தொடர்பான பணியை கவனித்து வந்தார். அதில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை நீதிமன்றத்திலும் ஒப்படைத்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியையும் செய்து வந்தார்.
இந்நிலையில் 11 குற்ற வழக்குகளில் தொடர்புடைய 50 சவரன் நகையை போலீசார் அதை நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியை சொப்பன சுஜா வசம் வழங்கியிருந்தனர். இதற்கிடையில், நகைகளை நீதிமன்றத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்த சொப்பன சுஜா, இது குறித்து காவல் நிலைய அதிகாரிகள் கேட்டால், முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்ததோடு, சில உயர் அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி நழுவி வந்துள்ளார்.
நீண்ட நாட்களாக நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்த நிலையில், சிங்காநல்லூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவக்குமார் சொப்பன சுஜாவிடம் விசாரணை மேற்கொண்டார். இதனால் பயந்து போன பெண் காவலர் நீண்ட நாள் விடுப்பு எடுத்துச் சென்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் சொப்பன சுஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் உரிய பதில் தராமல் 50 சவரன் நகைகளை மோசடி செய்தது தெரியவந்ததை அடுத்து, சொப்பன சுஜாவை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர். மேலும் சொப்பன சுஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.