May 24, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வாகனங்களை அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் 31ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சமயத்தில் அனைத்து வகையான கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பால், குடிநீர் விநியோகம், நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கோவையில் வீடு தேடி வந்து காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்வதற்கு ஒரு வார்டுக்கு 2 வாகனங்களை இயக்க மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஒரு மண்டலத்துக்கு 10 வாகனங்கள் என்ற அடிப்படையில் 50 நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடமாடும் காய்கறி விற்பனை செய்யும் வாகனங்களை கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். விருப்பமுள்ள காய்கறி வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி கடைக்காரர்கள் மாநகராட்சி அலுவலகங்களில் அனுமதி பெற்று ஒதுக்கப்படும் வார்டுக்கு சென்று விற்பனை செய்யலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அனைத்து வாகனங்களிலும் காய்கறி விலை ஒரே மாதிரியாக விற்கப்பட வேண்டும் எந்த விதத்திலும் வித்தியாசம் வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ள மாநகராட்சி நிர்வாகம் விற்பனையை கண்காணிக்கவும் கூடுதல் வாகனங்கள் தேவைப்பட்டால் இயக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் குழு நியமித்துள்ளது.
ஒவ்வொருவருக்கும் காய்கறி வாகனங்கள் செல்வதையும், தனிநபர் இடைவெளியுடன் விற்பனை நடைபெறுவதையும் மாநகராட்சி வருவாய் பிரிவினர் உறுதிப்படுத்தவேண்டும் எனவும், வார்டு வாரியாக சென்று காய்கறி விற்க விரும்பும் வியாபாரிகள் அந்தந்த மண்டல உதவி ஆணையர் இடம் அனுமதி பெற்று விற்பனை செய்யலாம் எனவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.