December 19, 2018
தண்டோரா குழு
கோவையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இந்து அமைப்புகளின் தலைவர்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக கோவையை சேர்ந்த ஆசிக், விழுப்புரம் மாவட்டதை சேர்ந்த இஸ்மாயில், சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, சலாவுதீன், சம்சுதீன் ஆகிய 5 பேர் மீது சட்டவிரோதமாக செயல்படுவதற்கு சதி திட்டம் தீட்டுவது (143), கூட்டு சதி (120 (பி)), மற்றும் தடுப்புக்காவல் சட்டமான UAPA சட்டத்தின்படி அரசுக்கும், பொதுமக்களுக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவது உள்ளிட்ட உள்ளீட்டு பிரிவுகளான 15,16,18 , 20, 38 (2) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து வெரைட்டி ஹால் காவல்துறையினர் கடந்த 2ஆம் தேதி கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய ஆசிக்கின் நண்பர்களான உக்கடம் ஜி.எம்.கரை சேர்ந்த பைசல் ரஹ்மானையும்குனியமுத்தூரை சேர்ந்த அன்வரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுவரை இவ்வழக்கு தொடர்பாக ஏழுபேரை கோவை காவலதுறையினர் கைது செய்துள்ள நிலையில் விசாரணையில் அவர்கள் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தொடர்பில் இருந்தது தெரிய வந்ததையடுத்து இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
இவர்கள் மீதான வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது.இந்நிலையில், இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கைதானவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ள பைசல், சந்திரன் வீதியில் உள்ள ஆசிக் மற்றும் குனியமுத்தூரில் உள்ள அன்வர் ஆகியோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர்.