December 23, 2019
கோவையில் 10 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்தநிலையில் வாகன சோதனை, நீண்ட நாட்களாக பூட்டப்பட்டு உள்ள வீடுகள், லாட்ஜ்கள், அதிகமாக தங்கி இருக்கக்கூடிய நபர்கள் பற்றிய விபரங்கள் குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு பேரூர் மதுவிலக்கு அமலாக்க துறை போலீசாருக்கு தொலைபேசி மூலமாக ஒரு தகவல் வந்தது. பேரூர் அருகே உள்ள ஜல்லிப்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கேன்களில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.இதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வீட்டினுள் சென்று ஆய்வு செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட கேன்களில் காய்ச்சி பதப்படுத்தப்பட்ட எரிசாராயம் கேன்களில் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து போலீசார் 10 ஆயிரம் லிட்டர் மதிப்பிலான எரிசாராயத்தை பறிமுதல் செய்து அந்த வீட்டில் தங்கி இருந்தவர்கள் யார்? வீட்டின் உரிமையாளர் யார்? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்தல் சமயத்தில் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாக்காளர்களுக்கு மதுவுக்கு பதிலாக சாராயம் வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? இல்லை வேறு மாநிலத்திற்கு கடத்துவதற்காக இங்கே படுக்க வைக்கப்பட்டு இருந்தது என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.