October 16, 2019 தண்டோரா குழு
கோவையில் இளைய சமுதாயத்தினரிடையே புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 10ஆயிரம் மாணவர்கள் ஒன்று கூடி லிம்கா சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
உலகை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயாக பார்க்கப்படும் புற்றுநோய் பாதிப்பின் அளவு ஒவ்வொரு வருடமும் 1 சதவிகிதம் அதிகரித்தே வருகிறது. 1984 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 60 பேருக்கு இருந்த புற்றுநோயின் தாக்குதல், தற்போது 90 முதல்100 பேராக அதிகரித்துள்ளது. புகைபிடித்தல், தவறான உணவு பழக்கம், குடும்ப வழியாக வரும் பாதிப்பு என புற்றுநோய்க்கான காரணங்கள் பல கூறப்பட்டாலும், சரியான விழிப்புணர்வு, முறையான மருத்துவ ஆலோசனை இருந்தால் இந்த புற்றுநோயை தடுக்க முடியும் என்று இன்று 10ஆயிரம் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பேரசிரியர்களை கொண்டு கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக கேன்சர் லோகோவான ரிப்பன் வடிவில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரியில் மைதானத்தில் ஒன்று கூடி இருந்தனர் இந்த முயற்சியானது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளதாகவும், 6500 க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட 10 ஆயிரத்து 560 மாணவ, மாணவியர்கள் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவது கோவையில் முதல் முறையாகவும், அக்டோபர் மாதம் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுவதையொட்டி, இளைய சமுதாயத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.