July 20, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர் என்ற அடிப்படையில் பணி நியமனம் பெற்று பணி செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக நீதிக்கட்சி சார்பில் மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சியில் கடந்த ஆண்டு தூய்மைப் பணியாளர்களாக 325 பேர் நியமிக்கப்பட்டனர். அனைத்து சாதியினருக்கும் பொதுவாக தூய்மைப் பணியினை வழங்க வேண்டும் என்ற அரசு ஆணையின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்கள். இதில் பலர் அரசியல் பலத்தாலும், சாதி பலத்தாலும், பண பலத்தாலும் தேர்வு செய்யப்பட்டனர்.
அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் இதுவரை தூய்மை பணி செய்ய மறுத்து வருகின்றனர்.அரசு விதிகளின்படி தேர்வு செய்யப்பட்ட பணியாளர் தனக்கு உரிய பணியினை செய்ய தவறினால் அவரை பணியை விட்டு நீக்க விதிகள் உள்ளது. ஆனால் இதுவரை பணி செய்யாத யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக அவர்கள் அலுவலத்துக்குள் பணி செய்ய ஊக்குவிக்கப் படுகிறார்கள். இது சாதி வேறுபாட்டை ஊக்குவிப்பதற்கான சரிநிகர் ஆகும். எனவே தூய்மை பணி செய்ய மறுக்கும் யாராக இருந்தாலும் கட்டாயமாக தூய்மை பணி செய்ய வார்டுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெத்தலை, பாக்கு, தாம்பூல தட்டுடன் மனு அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.