June 10, 2021
தண்டோரா குழு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு லேசானா அறிகுறி உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் ஆலோசனை பெற கோவை மாநகராட்சி சார்பில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து போர்கால அடிப்படையில் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நோய் தொற்றின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
தொற்று பாதித்தவர்கள் மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள் உள்ளிட்ட உதவிகள் பெற கோவையில் மூன்று கட்டுபாட்டு அறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் லேசான தொற்று அறிகுறியுடன் வீட்டில் தனிமைபடுத்தி கொண்டவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு கோவை மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து CBE CORP VMed என்ற புதிய ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இதன் செயல்பாட்டை கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்த்தில் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
இது குறித்து மாநகர சுகாதார அலுவலர் ராஜா கூறுகையில்,
“லேசான தொற்று பாதிப்பு உள்ளவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும்போது பரவல் அதிகரிக்க வாய்புள்ளதால் வீட்டில் இருந்தபடியே மருத்துவர்களின் ஆலோசனைகளை வீடியோ கால் மூலம் பெற்று கொள்ளவதுடன் பரிந்துரை சீட்டையும், இந்த செயலியின் மூலம் பதிவிறக்கம் செய்து கொண்டு அதனை மருந்தகங்களில் காண்பித்து மாத்திரைகள் பெற்று கொள்ளலாம்.
மேலும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஆறு மருத்துவர்கள் இதற்காக பணியமர்த்தபட்டு உள்ளனர். அழைப்புகள் அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் மருத்துவர்கள் பணியமர்த்த படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.