April 27, 2020
தண்டோரா குழு
கோவையில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு அருகே உள்ள ஹட் கோ காலனி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீதர் வயது 72.இவரது மனைவி பத்மாவதி 55 இவர்களுக்கு பாலாஜி 49, முரளி 45 ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் தனது தாய் தந்தையுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வசித்துவந்தனர்.முரளி கோவையில் உள்ள ஒரு தனியார் வாட்ச் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல வீட்டில் இருந்தவர்கள் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர்.இன்று அதிகாலை 2 30 மணி அளவில் ஸ்ரீதர் கழிவறைக்கு சென்றார். அப்போது கழிவறை முழுவதும் விஷவாயு பரவியிருந்தது இதனை சுவாசித்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.
நீண்ட நேரமாகியும் தந்தை திரும்பி வராததால் அவரை தேடி அவரது இரண்டாவது மகன் முரளி கழிவறைக்கு சென்றார் அவரும் அங்கேயே மயங்கி விழுந்தார்.தந்தை மற்றும் தனது தம்பி நீண்ட நேரமாக திரும்பி வராததால் சந்தேகமடைந்த மூத்த மகன் பாலாஜி கழிவறைக்கு சென்றார்.அப்போது விஷவாயு சுவாசித்த அவர் அங்கேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.இதனைப்பார்த்த பானுமதி அதிர்ச்சி அடைந்தார் பின்னர் இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அவர்கள் கதவை உடைத்து உள்ளே வந்தனர் பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார்.ஸ்ரீதர்,முரளி ஆகியோரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு இரண்டு பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஸ்ரீதர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த தகவல் கிடைத்ததும் பீளமேடு இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு பிரிந்து சென்றனர். கழிவறையில் விஷவாயு தாக்கி இறந்த பாலாஜியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.