May 22, 2019 தண்டோரா குழு
தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள சலுகையின் படி ஆட்சியருக்கு உள்ள அதிகாரத்தால் ஒரே ஒரு சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை 8.30க்கு துவங்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி தெரிவித்துள்ளார்.
கோவை பாராளுமன்ற தொகுதி மற்றும் சூலூர் இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி நாளை காலை 8 மணியளவில் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் (ஜி.சி.டி) துவங்க உள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் இராசாமணி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் இதர அதிகாரிகளுடன் வாக்கு எண்ணும் மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்,
இயந்திரங்கள் 3 அடுக்கு காவல் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணிக்கு 100 விழுக்காடு ஆயத்தமாக உள்ளோம். 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 14 மேசைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மட்டும் 20 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது.அதிகபட்சமாக பல்லடம் தொகுதிக்கு 30 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும். 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டை இல்லாமல் யாரும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். முகவர்கள் பேனா மற்றும் கையேடு மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் மையத்திற்கு மட்டும் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.144 தடையுத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. முடிவுகள் அறிவிக்கப்பட தாமதமாக வாய்ப்புள்ளது என்றாலும் நிதானமாகவே வாக்குகள் எண்ணப்படும். ஆனால் முடிந்தவரை விரைவாக முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கடந்த கால அனுபவங்களை கணக்கில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 அடுக்கு சோதனைக்கு பிறகே முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மொத்தமாக 12 ஆயிரம் தபால் ஓட்டுக்கள் அனுப்பப்பட்ட நிலையில் நாளை காலை வரை தபால் வாக்குகள் பெறப்படும். இதுவரை 5527 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது.