March 8, 2021 தண்டோரா குழு
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக மாவட்ட கலெக்டர் ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.இதில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 531 ஆண்கள், 15 லட்சத்து 52 ஆயிரத்து 799 பெண்கள், 414 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். பத்து தொகுதிகளிலும் 4427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதனிடையே வாக்களிக்க வருவோருக்கு வாக்குச்சாவடிகளில் கொரோனா பரவாமல் தடுக்க வாக்காளர்களுக்கு கிருமிநாசினி மற்றும் கையுறை வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறியிருப்பதாவது:
வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் வரும் போது முகப்பில் அவர்களுக்கு முதலில் அவர்களது கைகளில் கிருமிநாசினி வழங்கப்படும்.அதனை கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னர் வாக்கு இயந்திரத்தில் சென்று வாக்களிக்கும் முன் கையுறை ஒன்று வழங்கப்படும். அதனை அணிந்து அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்க வேண்டும்.
பின்னர் கையுறைகளை இதற்காக என்று தனியாக வெளியில் வைத்துள்ள குப்பை தொட்டியில் போட வேண்டும்.அது அதிகாரிகளால் பாதுகாப்பாக அகற்றப்படும். கொரோனா பரவலை தடுக்க தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதற்காக என 2 நபர்கள் வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்படுவார்கள்.
இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.