July 16, 2019 தண்டோரா குழு
கோவையில் வரும் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
கோவை கொடிசியா, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சார்பில் 5வது ஆண்டாக புத்தக திருவிழா கோவை கொடிசியா தொழிற்காட்டி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டிகளுக்கான பரிசு வழங்குதல், இளம் படைப்பாளிகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, பேச்சு போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்ச்சிகள், 50 பெண் கவிஞர்கள் பங்கேற்கும் பெண்பா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. இந்த புத்தக திருவிழாவில் 150 பதிப்பாளர்களின் 250 நூல் விற்பனையகங்கள் இடம் பெற உள்ளன.
இது குறித்து இந்திய தொழில் வர்த்தக சபையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், கோவை கொடிசியா அமைப்பின் தலைவர் ராமமூர்த்தி பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
கொடிசியாவில் வருகின்ற 19 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை பத்து நாட்கள் கோயம்புத்தூர் புத்தக திருவிழா – 2019 நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 150 பதிப்பாளர்களின் 250 நூல் விற்பனையகங்கள் இடம் பெறுகின்றன. கடந்தாண்டு ஒன்றரை கோடிக்கு விற்பனை நடந்த நிலையில், இந்தாண்டு 3 கோடி ரூபாய் விற்பனை நடைபெறுமென எதிர்பார்க்கிறோம். கொடிசியா அறிவுக்கேணி என்ற பெயரில் ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து 100 பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.