June 26, 2020
தண்டோரா குழு
சேமிப்புக்காக கட்டிய பணத்தை குடும்ப வறுமையால் திரும்பக் கொடுக்கக் கோரி வாலிபர் ஒருவர் கோவையில் உள்ள தனியார் வங்கியில் அமர்ந்து கையில் கோரிக்கை அட்டையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மருதமலை சாலை முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்வானன். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் இவர் கோவை ஆர் எஸ் புரம், டிவி சுவாமி சாலை பகுதியில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் வைப்பு தொகை திட்டத்தின் கீழ் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து இவர் மாதந்தோறும் நான்காயிரம் ரூபாய் தொகையை செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் மூன்று மாதமாக வாழ்வாதாரமின்றி தவித்து வரும் அவர் மூன்று மாதமாக தவனை தொகையை செலுத்தாமல் இருந்துள்ளார். மேலும் வீட்டு வாடகை செலுத்த கூட பணம் இல்லாததால் தான் கட்டிய சேமிப்பு பணத்தை திரும்ப எடுப்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார்.ஆனால் வங்கி நிர்வாகம் ஐந்து வருடம் கழித்து மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். மேலும் பிரபுவை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முற்பட்டதால் ஆத்திரமடைந்த அவர் என் பணத்தை எனக்கு கொடு என அட்டையில் எழுதி கையில் வைத்தபடி வங்கி வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து தகவலறிந்து சமபவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வங்கி நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரிடம் புகாரினை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து தனது போராட்டத்தை கைவிட்டார்.இதன் காரணமாக வங்கி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.