November 9, 2019 தண்டோரா குழு
கோவையில் பெட்ரோல் பங்கிற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தீயணைப்புத் துறை அலுவலர் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி. இவர் அப்பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆவாரம்பாளையம் பகுதியில் பெட்ரோல் பங்க் வைப்பதற்காக பல்வேறு இடங்களில் அனுமதி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையில் அனுமதி பெற விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பத்தின் மீது விசாரணை மேற்கொண்ட கோவை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் பாலசுப்பிரமணியம் பெட்ரோல் பங்கிற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க தனக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் அவர் 40 ஆயிரம் மட்டுமே கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பாலதண்டாயுதபாணி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பெயரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் பாலதண்டாயுதபாணி இடம் கொடுத்து அதனை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் இடம் கொடுக்க செய்தனர். இதனையடுத்து ரயில் நிலையம் எதிரே உள்ள தீயணைப்பு துறை அலுவலகம் சென்ற பாலதண்டாயுதபாணி பாலசுப்பிரமணியத்திடம் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் மற்றும் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் தீயணைப்பு துறை அலுவலகத்துக்குச்சென்று கையும் களவுமாக பாலசுப்பிரமணியத்தை பிடித்தனர்.
இதனை அடுத்து அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் பங்கிற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தீயணைப்புத் துறை அலுவலர் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.