April 10, 2021 தண்டோரா குழு
கோவையில் ரூ.11 லட்சம் கையாடல் செய்த வழக்கில் இ.எஸ்.ஐ. நிறுவன காசாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இ.எஸ்.ஐ. (எம்பிளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பெங்களூருவை சேர்ந்த கிருஷ்ணமோகன் (40) என்பவர் காசாளராக பணியாற்றி வந்தார்.இவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை உள்ள காலகட்டத் தில் அந்த நிறுவனத்தின் பயனாளிகளுக்கு கிடைக்கவேண்டிய காப்பீட்டு தொகையை சிறிது சிறிதாக கையாடல் செய்து வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே அந்த நிறுவனத்தினர் கணக்குகளை தணிக்கை செய்தனர்.இதில் அவர் மொத்தம் ரூ.11 லட்சம் கையாடல் செய்தது தெரிய வந்தது.இது குறித்து அந்த இ.எஸ்.ஐ. நிறுவன அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் கடந்த 2016-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.இந்த வழக்கு விசாரணை கோவை சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணமோகனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பு அளித்தார்.