April 21, 2018
தண்டோரா குழு
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ததை கண்டித்து கோவையில் 150 க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்மையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை வெளியிட்டிருந்தது.அதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதுடன் பலகட்ட போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில்,கோவையில் 10 க்கும் மேற்பட்ட அமைப்புகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ததை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம்,திராவிடர் விடுதலை கழகம்,தமிழ் புலிகள் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்த்தில் ஈடுபட்டனர்.
இதனைதொடர்ந்து ரயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து கொண்டிருந்த வேளையில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வந்த கோவை வந்த பயணிகள் ரயிலில் வந்திறங்கிய தமிழ் புலிகள் அமைப்பை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் ரயிலை மறித்து மத்திய அரசுக்கு எதிராகவும் அரசியலமைப்பு சட்டம் 9ல் திருத்தம் செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.ரயில் எஞ்சின் மீது ஏறி அவர்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட சுமார் 150 பேரை கைது செய்தனர்.