October 2, 2020
தண்டோரா குழு
உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் இளைஞர் காங்கிரசார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் படத்தை செருப்பால் அடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மரணமடைந்த பட்டியல் இன பெண்ணின் வீட்டிற்கு ஆறுதல் சொல்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது, தள்ளு முள்ளு ஏற்பட்டதில் ராகுல் காந்தி கீழே விழுந்தார். இதனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் இளைஞர் காங்கிரசார் கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள மணிக்கூண்டு அருகே உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் படத்தை செருப்பால் அடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இளைஞர் காங்கிரஸ் மாநில செயலர் இமயம் ரஹ்மத்துல்லா,மற்றும் காங்கிரஸ் மனித உரிமைகள் குழு உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இதில், உ.பி.முதல்வர் பதவி விலக கோரி கண்டன கோசங்கள் எழுப்பபட்டது.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.