November 9, 2019 தண்டோரா குழு
அயோத்தி வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வானது இன்று தீர்ப்பு வழங்கவுள்ளதையடுத்து கோவையில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று அறிவிக்கப்பட்டுள்ள அயோத்தி தீர்ப்புக்காக கோவை மாநகர் பகுதிகளில் காந்திபுரம், உக்கடம், டவுன்ஹால், மரக்கடை, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோவில்கள் எனக் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கோவை மாநகர் பகுதிகளுக்குள் வருகின்ற நான்கு சக்கர வாகனங்கள் லாரிகள் பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் என அனைத்தையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுப்பப்படுகின்றனர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாள்தோறும் விசாரணை நடத்தியது. 40 நாள்கள் நடைபெற்ற விசாரணையின் இறுதியில், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இதையடுத்து, நாடு முழுவதும் பதட்டமான பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகம் கூடுமிடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவில்கள், மசூதிகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனர். ரயில் நிலையங்களில் வரும் பொதுமக்கள், அவர்களது உடமைகள் பொருட்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்கபட்டுவருகிறது. ரயில் பெட்டிகள், பேருந்துகள் என மக்கள் கூட்டமுள்ள இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.