June 26, 2019 தண்டோரா குழு
கோவையில் துப்புரவு பணியாளர்களின் தினக்கூலியை உயர்த்தி தர வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் தங்களுக்கு கடந்த இரண்டாயிரத்து பதினேழு பதினெட்டாம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி 350 ரூபாய் தினகூலியாக வழங்கப்பட்டதாகவும் இதுவரை அந்த கூலியே நடைமுறையில் உள்ளதால் தாங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் தங்களுக்கான தினக்கூலியை உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன் பல ஆண்டுகளாக தாங்கள் தினக்கூலி அடிப்படையிலேயே பணியாற்றி வருவதால் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட பஞ்சாயத்துகளின் துணை இயக்குநரிடம் வழங்கிய நிலையில் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.