January 25, 2019 தண்டோரா குழு
கோவையில் மயக்க ஊசி செலுத்தி சின்னத்தம்பி யானையை பிடிக்கும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வரப்பாளையம், சோமையனூர், சின்னதடாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது நுழைவதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து கடந்த மாதம் விநாயகன் என்ற காட்டு யானையை பிடித்த வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்தனர்.
தற்போது சின்னத்தம்பி என்ற காட்டு யானையை பிடிக்கும் நடவடிக்கைக்கு முன்னோட்டமாக அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.இதையடுத்து, இந்த யானையை பிடிப்பதற்காக டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம் என்ற கும்கி யானையும், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து முதுமலை என்ற யானையும் கோவைக்கு அழைத்து வரப்பட்டன.
இந்நிலையில், இன்று காலை பெரிய தடாகம் வனப் பகுதியை ஒட்டி சின்னத்தம்பி யானைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்த முயன்றனர். ஆனால், அது யானை மீது பாடாமல் விலகி சென்றது. பின்னர் மீண்டும் யானை மீது மயக்க ஊசி செலுத்தினர். அப்போது அந்த யானை விநாயகன் யானையை பிடித்த இடத்திற்கே வந்தது. இதற்கிடையில், சின்னத்தம்பி யானையுடன் ஒரு யானை மட்டும் குட்டியானை இருந்ததால் யானையை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, தற்போது பெண் யானை மற்றும் குட்டியை வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சின்னதம்பியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.