December 23, 2019
கோவை மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறித்து அவ்வப்போது மாநாகராட்சி நகர் நல அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் கேன்டீனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உதவி நகர் நல அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீஸ் கேன்டீனில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது கடையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் கேன்டீனுக்கு 3000 ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் கேன்டீன் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவல் ஆணையர் அலுவலக வளாக கேன்டீனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதற்கு அபராதம் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, இனிமேல் பார்சல் தரப்படாது எனவும் பார்சலுக்கு பாத்திரம் கொண்டு வரவும் என அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.