July 17, 2020
தண்டோரா குழு
கோவையில் பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் பூசியுள்ளனர். பெரியார் தொண்டர்கள் குழுமியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பாதுகாப்புக்காக போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுந்தராபுரம் அருகே பெரியாரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது. இது கடந்த 1995-ம் ஆண்டு கோவையில் நிறுவப்பட்ட மூன்று முக்கிய சிலைகளில் ஒன்றாக இருக்கிறது. திராவிட கழக தலைமையால் திறந்து வைக்கப்பட்டஇந்தசிலை அருகே பல்வேறு விதமான போராட்டங்களும் பல்வேறு விதமான பெரியாரின் சிந்தனை நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடைபெறுவது வழக்கம்.
இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக பெரியாரியல் சிந்தனையாளர்கள் மற்றும் வலதுசாரி சிந்தனை என்ற கருத்து மோதல் நிலவியதன் அடிப்படையில் தற்போது அசம்பாவிதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதனடிப்படையில் மர்ம நபர்கள் இன்று அதிகாலை அந்த பகுதிக்கு வந்தபோது காவி சாயத்தை பெரியார் சிலை மீது பூசி விட்டு சென்றுள்ளனர். இதனை அறிந்த தொண்டர்கள் இன்று காலை அந்த பகுதியில் குழுமியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் அறிந்த குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவல்துறையின் மற்ற அதிகாரிகள் காவலர்கள் அந்த பகுதிக்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இந்த சூழ்நிலையில் அப்பகுதியில் பெரியாரின் சிந்தனையை முன்னிலைப்படுத்தி போராட்டம் நடைபெற்றது. கோஷங்களை எழுப்பிய தொண்டர்கள் திமுக தொண்டர்கள் மற்றும் மதிமுக தொண்டர்கள் உடனடியாக காவி சாயம் பூசிய மர்ம நபரை கைது செய்ய வேண்டும் எனவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். தமிழகத்தில் எங்கு இது போன்ற ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் அந்த பகுதியில் போராட்டம் வெடிக்கும் என்றும் தமிழகம் தழுவி மிகப்பெரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் பெரியார் தொண்டர்கள் எச்சரித்து அப்பகுதியிலிருந்து சென்றனர். பெரியாரின் சிந்தனை கொண்ட வலைதளம் ஒன்று தொடர்ந்து பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட நிலையில் வலதுசாரி சிந்தனையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.