September 26, 2019 தண்டோரா குழு
கோவையில் பெண்மணி ஒருவரை நகைக்காக துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சூட்கேசில் அடைத்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை, அவிநாசிரோடு, ரஹேஜா அடுக்குமாடி குடியிருப்பில்,கடந்த 2013 ஆம் ஆண்டு, சரோஜினி என்ற 54 வயது பெண்மணி, துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சூட்கேசில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த கொலை வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த, யாசர் அராபத் என்பவரை, விசாகப்பட்டினத்தில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை 4 வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் விசாரணை முடிவுற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி யாசர் அராபத்திற்கு, தடயங்களை அழித்ததற்காக 7ஆண்டுகள் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும், கொள்ளைக்காக 7ஆண்டுகள் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், கொலைக்குற்றத்திற்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.