June 11, 2021
தண்டோரா குழு
பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகார்களை உடனடியாக விசாரிக்க மகளிர் போலீசாருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆண் காவலர்களுக்கு புகார்களை உடனடியாக சென்று விசாரித்திட இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று கோவை மாவட்டத்தில் உள்ள பெண் காவலர்களுக்கும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.
கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாக செல்வரத்தினம் கலந்துகொண்டு மகளிர் போலீசாருக்கான இரு சக்கர வாகன செயல்பாட்டினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம்,
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் உள்ள மகளிர் காவலர்களுக்காக இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகார்களை உடனடியாக நேரில் சென்று விசாரணை நடத்திடவும் அவர்களுக்கு உதவி செய்திடவும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் மடிக்கணினியும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
18 காவல் நிலைய மகளிர் போலிசாரிக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு ரோட்டரி கிளப்பும் உதவியுள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் இந்த வருடம் தற்பொழுது வரை 25 வழக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவித்த அவர் கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த வருடம் குறைவான வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாக தெரிவித்தார். அதே சமயம் பெண்களின் வன்கொடுமை புகார்களையும் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.