April 1, 2019
தண்டோரா குழு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவை தொகுதிக்கான மக்கள் நீதி மய்யக் கட்சியின் வேட்பாளர் மகேந்திரன், தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். கோவை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மகேந்திரன் போட்டியிடுகிறார். இதையடுத்து, கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்ப்பட்ட பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், மகேந்திரன் இன்று கோவை ரேஸ்கோர்ஸ், துடியலூர் என அடுத்தடுத்து பல்வேறு முக்கிய பகுதியில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். காலை துடியலூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், துடியலூரில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.மேலும், துடியலூர் சந்தையில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றார்.
அதைபோல், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் கட்சியின் கொள்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, மாற்றத்தை உருவாக்க வாய்ப்பு தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டனர். கோவை வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து கோவையில் வரும் 5-ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.