January 21, 2019 தண்டோரா குழு
வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி கோவையில் வரும் பிப்ரவரி மாதம் 10 -ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு போட்டி. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் பெரும்பாலும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் சென்ற ஆண்டு ஓம் கார் பவுண்டேஷன் சார்பில் நடைபெற்றது. இதில் பல மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் மற்றும் மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டி கோவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கோவையில் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி பிப்ரவரி மாதம் 10 -ம் தேதி நடைபெறும் என arivikakaஅறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை ஜல்லிக்கட்டு சங்கத்தின் செயலாளர் தங்கவேல் கூறுகையில்,
நீதிமன்ற உத்தரவு படி கோவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, கோவையைச் சேர்ந்த பல்வேறு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கோவை ஜல்லிக்கட்டு சங்கத்தை உருவாக்கியுள்ளோம். இந்த சங்கம் சார்பில் இந்த ஆண்டு கோவையில் பிப்.10ல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதில், சுமார் 600 மாடுகள், 400 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டியை எல் & டி பைபாஸில் உள்ள செட்டிப்பாளையத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. சென்ற வருடத்தைப் போலவே இந்த ஆண்டும் கோவை மக்கள் ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க ஆர்வத்துடன் உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது எனக் கூறினார்.