December 7, 2018 தண்டோரா குழு
சித்த மருத்துவ மூலிகைகளை பாதுகாப்பது மற்றும் அதன் பயன்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கோவையில் நடைபெற்ற சித்த மருத்துவ திருநாள் கருத்தரங்கில் அமைக்கப்பட்டிருந்த மூலிகை கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது.
ஆண்டுதோறும் அகத்தியர் பிறந்த மாதம் என கருதப்படும் மார்கழி ஆயில்ய நட்சத்திர தினம் தேசிய சித்தர் திருநாளாக மத்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் மேட்டூரில் இயங்கி வரும் மூலிகை தோட்டம் மற்றும் சூலூர் ஆர்.வி.எஸ்.கல்லூரி சார்பில் தேசிய சித்த மருத்துவ திருநாள் கருத்தரங்கம் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குனர் கனகவள்ளி கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மூலிகைகளை சேகரித்து, பதப்படுத்தி, அதனை பயன்படுத்துவது தொடர்பாக அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இக்கண்காட்சி நடைபெறுவதாகவும் சித்த மருத்துவ மூலிகைகள் தொடர்பாக இக்கருத்தரங்கில் சமர்பிக்கப்படும் 50க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் மருத்துவ குணம் மிக்க மூலிகை செடிகளை கண்டறிந்து பாதுகாக்க உதவும் எனவும் தெரிவித்தார். கருத்தரங்கின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் பாரம்பரிய மூலிகை வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோடு, அதன் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது மாணவர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர் கவிதா முன்னிலை வகித்தார்.