July 18, 2018
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள பழுதடைந்த சாலைகளால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருவதால் உடனே சாலையை செப்பனிட சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.கார்த்திக் வலியுறுத்தியுள்ளார்.
கோவை சவுரிபாளையம் சாலையை ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட 56,65வது வட்டங்களில் உள்ள பகுதிகளை உள்ளடக்கிய பீளமேடு அவினாசி சாலை,ராதாகிருஷ்ணா மில் சந்திப்பு சாலை முதல் சவுரிப்பாளையம் வரையிலான சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டது.இந்த சாலைகள் மூடப்படாததால் சாலை குண்டும்,குழியுமாக மாறியதுடன்,கடந்த சில நாட்களாக கோவையில் தொடர் மழை பெய்து வருவதால் முழுவதுமாக மண் சாலையாக மாறி வாகன ஓட்டிகள் சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சியிடம் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லையென்றும், கடந்த 2009ம் ஆண்டு ரூ. 400 கோடி மதிப்பில் திமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் 10 ஆண்டுகளாகியும் பணிகள் முடிக்காமல்,ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருதாக குற்றச்சாட்டினார்.மேலும்,தொடர்ந்து மாநகராட்சி சாலையை சீரமைக்காமல் இருந்தால்,திமுகவின் தோழைமை கட்சிகளுடன் இணைந்து அனைத்துக்கட்சி சார்பில் மிகப்பெரிய மாநகராட்சி முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.