June 15, 2019 தண்டோரா குழு
கோவையில் பழமை வாய்ந்த 21 தெய்வங்கள் அமைய பெற்ற ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவை,போத்தனூர் மேட்டூர் பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. விநாயகர்,காசி விஸ்வநாதர்,கன்னிமார்,லஷமி தேவி என 21 தெய்வங்கள் கொண்ட இக்கோயிலின் புனரமைப்புப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று, முடிந்த நிலையில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 2 நாட்களாக கணபதி ஹோமம், நவக்கிரஹ பூஜை, லட்சுமி, தன, கோ பூஜைகள், முதலாம், இரண்டாம், மூன்றாம் கால யாக வேள்வி பூஜைகள், அஷ்டபந்தன பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சிருங்கேரி மடம் ஆனந்த பாலாஜி சர்மா குழுவினர்,தலைமையில் நான்காம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, மேளதாளங்களோடு வேதங்கள் முழங்க புனித நீர் கொண்டு வரப்பட்டது. அதனை, கலசங்கள் மீது ஊற்றி, பக்தர்கள் மீது தெளித்தனர். அப்போது, பக்தர்கள் பக்தியுடன் அம்மனை வேண்டினர்.
விழாவில், கோவை போத்தனூர்,. மேட்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சளர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் முகேஷ் பாபு,சுந்தரவடிவேலு, ஜெயமோகன்,கார்த்திகேயன் ஆகியோர் உட்பட கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.