April 30, 2019
தண்டோரா குழு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணி நீக்கம் செய்யப்பட்ட சாலை பணியாளர்கள் கோவை திருச்சி சாலையிலுள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பாக தண்டோரா அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைப்பணியாளர்களின் பணிநீக்கம் செய்யப்பட்ட காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், பணி நீக்க காலத்தில் இறந்துபோன ஊழியர்களின் வாரிசுகளுக்கு விதிமுறையை தளர்த்தி வாரிசு பணி வழங்கிட வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு நிரந்தர ஊதியம் நடைமுறைகளை வழங்கிட வேண்டும் முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலை துறையில் சாலை பணியாளர்களை வஞ்சிக்கப்படும் நிகிழ்ச்சியாக இது இருக்கிறது என குற்றம் சாட்டியுள்ள சாலைப்பணியாளர்கள் இன்று தமிழகம் முழுவதும் 7 கண்காணிப்பு பொறியாளர் அலுவலகங்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பாக தண்டோரா அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி தண்டோரா அடித்து கோஷங்களை எழுப்பிய அவர்கள் தமிழக அரசாங்கம் தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் வருகிற மே மாதம் 28ம் தேதி சென்னையிலுள்ள நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குனர் அலுவலகத்தில் சாலை பணியாளர்கள் குடும்பத்தோடு கோரிக்கைக்கான அரசாணை வரை உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துவோம் என்றும் தமிழக முதலமைச்சர் தங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.