December 25, 2019
கோவையில், 92 வயது மூதாட்டி ஒருவர் பழைய ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்தத் தகவல் தெரியவந்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அந்த நடவடிக்கை இப்போதும் எளிய மக்களை தாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம், பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கம்மாள், தங்கம்மாள் என்ற சகோதரிகள் சேமித்து வைத்த பழைய ரூபாய் நோட்டுகளால் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர். இதில், ரங்கம்மாள் கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். தற்போது, இதேபோல கோவையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கோவை கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலம்மாள். வயது 92. இவரது கணவர் ராஜ்வாலா இறந்து பல ஆண்டுகளாகிவிட்டன. இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். கமலம்மாள் சிறுக சிறுக சேமித்தப் பணத்தை பீரோவில் வைத்துள்ளார். அப்படி, ரூ.33,000 சேமித்து வைத்திருக்கிறார். ஆனால், அவையெல்லாம் செல்லாக் காசு என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நோட்டுகள்.
என்ன நடந்தது என்று கமலம்மாளின் மகன் கோபாலிடம் பேசினோம்,
“வயதாகிவிட்டதால் அம்மாவுக்கு சரியாக காது எல்லாம் கேட்காது. பண மதிப்பிழப்பு நேரத்தில், நாங்கள் வெளியூரில் இருந்தோம். அம்மாவிடம் இதுபற்றி சொன்னபோது, ‘என்கிட்ட எங்கடா பணம் இருக்கு?. எதுவும் இல்ல’ என்று சொன்னார். இதனால், அப்போது நாங்களும் விட்டுவிட்டோம்.பிறகு ஒருநாள் பீரோவை சுத்தப்படுத்தியபோதுதான் பணம் இருப்பது எங்களுக்கு தெரிந்தது. ஒரு புடவைக்குக் கீழ்தான் இந்த பணம் எல்லாம் இருந்தது. அம்மாவிடம் கேட்டதற்கு, ‘எனக்கு அது நியாபகமே இல்ல சாமி’ என்றார்.
நாங்களும் பல இடங்களில் முயற்சி செய்து பார்த்துவிட்டோம். எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். இது அவர் சிறுக சிறுக சேமித்தப்பணம். எனவே, அரசுதான் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.