October 2, 2020
தண்டோரா குழு
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தவிர்க்கும் பொருட்டு, கோவை மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது,என மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில், அக்டோபர் 2 ஆம் தேதி, தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினத்தினை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஊரகப் பகுதிகளில் கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.அவ்வாறு இன்று (02.10.2020) நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டம், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தவிர்க்கும் பொருட்டு ரத்து செய்யப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஆண்டுதோறும் அக்டோபர் 2 ஆம் தேதியன்று தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினத்தினை முன்னிட்டு, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தவிர்க்கும் பொருட்டும், கிராமப்புற பொதுமக்களின் நலன் கருதியும், தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவிருந்த கிராமசபைக்கூட்டம் ரத்து செய்யபடுவதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்திலும் இன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது, என்று அறிவித்துள்ளார்.