June 27, 2018
தண்டோரா குழு
கோவை போத்தனூர் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது இருந்த ஹெல்மெட்டை இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சர்வ சாதராணமாக திருடி செல்வது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற சூழல் நிலவி வருவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டை கண் போல் காத்து வருகின்றனர்.போக்குவரத்து காவலர்கள் விதிக்கும் அபராதம் மற்றும் பாதுகாப்பிற்காக தலைக்கவசம் அணியும் வழக்கம் கோவை வாகன ஓட்டிகளிடம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஹெல்மெட் திருட்டுகளும் அதற்கு இணையாக அதிகரித்து வருகிறது.வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்படும் வாகனங்களில் வைக்கப்படும் ஹெல்மெட்களும்,சாலைகளில் நிறுத்தப்படும் வண்டிகளில் மாட்டி வைக்கப்பட்டுள்ள ஹெல்மெட்களும் திருட்டு போவது அதிகரித்து வருகிறது.
1000 ரூபாய்க்கு கீழே ஹெல்மெட் கிடைப்பதால் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினரையும் பொதுமக்கள் நாடுவதில்லை.இதனை வசதியாக கொண்டு ஹெல்மெட் திருட்டு அதிகரித்துவருவதற்கு உதாரணமாக போத்தனூர் பகுதியில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தில் மாட்டி வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டை சர்வசாதாரணமாக இளைஞர்கள் இருவர் திருடி செல்வது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.இது போன்ற திருட்டு சம்பவங்களை தடுப்பதும் காவல்துறைக்கு சவாலாக உள்ளது.