December 8, 2018 தண்டோரா குழு
ஒருவர் பற்றிய மதிப்பீட்டை எளிதாக சொல்லிவிடும் அளவுக்கு, ஆடை கலாசாரம் மிகப்பெரிய தாக்கத்தை தற்போது ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம், அதற்கு இணையான அலங்காரமும் பெண்கள் மத்தியில் பெரும் மயக்கத்தையே உண்டாக்கியிருக்கிறது. இதற்காகவே காலத்திற்கேற்ப நவீன ஆடை வடிவமைப்பாளர்கள் அதிகளவில் உருவாகி வருகின்றனர்.
அந்தவகையில், பேஷன் டிசைனிங் பயிலும் மாணவர்களுக்கான ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி, கோவையை அடுத்த சரவணம்பட்டி பகுதியில் உள்ள டிப்ஸ் கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு மாணவர்களின் தனித்திறமையை ஒன்றிணைத்து, ‘தேவதை கதைகளில் வரும் ஆடை வடிவமைப்பு’ எனும் பொருளை முக்கிய கருப்பொருளாக கொண்டு அரங்கேறிய அசத்தல் பேஷன் ஷோ கண்களுக்கு குளுமையாக இருந்தது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பண்டைய கால கிரேக்க மற்றும் ஐரோப்பிய கதைகளில் வரும் சிண்ட்ரெல்லா உள்ளிட்ட தேவதைகளின் ஆடைகள் போன்ற நீளமான கவுண்களை இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றவாறு வடிவமைத்து , பல வண்ணங்களில் மாணவிகள் அணிந்து மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்த காட்சி அனைவரின் கவனைத்தையும் ஈர்த்தன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரியின் ஆடை மற்றும் வடிமைப்பு இயக்குனர் சண்முகப்பிரியா,
மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இதில், கோவை, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும், இதில் பிரத்யேகமாக தேவதை கதைகள் குறித்த ஆய்வுகள் செய்து அந்த கதைகளில் வரும் உடைகளை நவீன காலத்திற்கு ஏற்றவாறு மாணவர்கள் வடிவமைத்து உள்ளதாக தெரிவித்தார்.