April 6, 2019 தண்டோரா குழு
பாராளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு தொடர்பாக கோவை சரகத்திற்குட்பட்ட காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசணை கூட்டம் மாநகர ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு திறப்பு இயக்குனர் விஜயகுமார் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு தொடர்பான பல்வேறு முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்நிலையில் கோவை சரகத்திற்குட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு ,நீலகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் மற்றும் கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இரண்டு மாநகர காவல்துறை அதிகாரிகளுக்கான பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை மாநகர காவல் துறை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு இயக்குனர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மற்றும் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாகவும் வாக்குச்சாவடிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அளிப்பது மற்றும் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கணக்கிடப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக காவல்துறை இயக்குநர் விஜயகுமார் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் திடீரென ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.