June 28, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா இன்று நேரில் பார்வையிட்டும் , களப்பணியாளர்களின் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.94,97 – க்குட்பட்ட சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் , இருமல் பரிசோதனை,உடல் வெப்பநிலை பரிசோதனை , பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் உடல் ஆக்சிஜன் அளவை கண்டறிதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் களப்பணியாளர்களிடம்
ஆணையாளர் அறிவுரை வழங்கினார்.
அப்போது தெரிவித்ததாவது ,
கொரோனா தடுப்புப்பணிகளில் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று பணியாற்றும் பணி மிக முக்கிய பணியாகும். களப்பணியாளர்கள் பணி மேற்கொள்ளும்போது வீடு தவறாமல் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்திட வேண்டும் . அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் , கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திட வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய பின்னர் , தெற்கு மண்டலம் வார்டு எண் .97 , 100 – க்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் குறித்து தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
தொடர்ந்து , வார்டு எண் .97 குறிச்சி , குனியமுத்தூர் மற்றும் கிணத்துக்கடவு கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் செயல்பட்டுவரும் நீர் உந்து நிலையத்தின் பணிகள் குறித்து கேட்டறிந்த ஆணையாளர் உந்து நிலையத்தில் குடிநீரில் குளோரின் அளவு சரியான முறையில் உள்ளதா என்பது குறித்தும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து,தெற்கு மண்டலம் வார்டு எண் .96 சாரதா மில் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டியினையும் , வார்டு எண் .92 கிருஷ்ணசாமி நகரில் கட்டப்பட்டுவரும் சமுதாயக் கூடத்தின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்ட ஆணையாளர் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள் .
பின்னர்,தெற்கு மண்டலம் வார்டு எண் .91 செங்குளத்தில் அபிவிருத்தி பணிகளான தடுப்புச்சுவர் அமைத்தல் , சாலை வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆணையாளர் தொடர்ந்து , வார்டு எண் .90 கோவைப்புதூர் பகுதியில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் ( Micro Composting Centre ) பணிகள் குறித்து கேட்டறிந்த பின்னர் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் மக்கும் கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது , மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் , தெற்கு மண்டல உதவி ஆணையர் சரவணன் , செயற்பொறியாளர் ஞானவேல் , உதவி செயற்பொறியாளர் சுந்தரர்ராஜன் , மண்டல சுகாதார அலுவலர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர் .