June 8, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட போளுவாம்பட்டி ஊராட்சியில் வேலை செய்து வரும் துப்புரவு பணியாளர்கள் இன்று தங்கள் பணிகளை முடித்து அலுவலகம் திரும்பினர். வரும் வழியில் ஆலந்துறையில் அனைவருக்கும் சம்பளம் பணத்தை வங்கியில் எடுத்துக்கொண்டு , ஊராட்சி அலுவலகத்திற்கு செல்ல ஊராட்சியின் குப்பை அள்ளும் வாகனத்தில் ஆண் , பெண் ஊழியர்கள் உட்பட எட்டு பேர் புறப்பட்டனர்.
ஆலாந்துரையில் இருந்து இக்கரை போளுவாம்பட்டி நோக்கி வாகனத்தை ராசு என்பவர் ஓட்டி வந்த நிலையில் நொய்யல் பாலத்தை வாகனம் கடக்கும் பொழுது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் பழனிச்சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் சிக்கியவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலந்துறை காவல்துறையினர் பலத்த காயங்களுடன் விபத்தில் சிக்கியவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.